படித்தது பிஇ.. வேலை இல்லை.. நகைக் கடைகளில் மோசடி.. வாலிபர் கைது!
Recommended Video
புதுச்சேரி: என்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காததால் திருவிழா கடைகளில் கவரிங் நகைகளை வாங்கி, அதனை நகை கடைகளில் நகை வாங்குவதுபோல் நடித்து தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகையை வைத்து நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் தினமும் இரவு வியாபாரம் முடிந்தவுடன், நகைகளை சரிபார்ப்பது வழக்கம். அதுபோன்று நேற்று முன்தினம் இரவு நகைகளை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, மோதிர பிரிவில் ஒரு மோதிரம் மட்டும் மற்ற நகைகளை விட அதிகமாக ஜொலித்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த ஊழியர் நகையை ஆய்வு செய்தபோது, அது கவரிங் நகை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஒரு வாலிபர் தொப்பி அணிந்து பாதி முகத்தை மூடியவாறு மோதிரத்தை மாற்றியது தெரியவந்தது.
இதனையடுத்து கடை மேலாளர் இதுதொடர்பாக பெரியக்கடை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நகை திருட்டில் ஈடுபட்டது, பொறியல் பட்டதாரியான முருகம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 25) என்பதும், என்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காததால் பணத்தேவைக்காக திருவிழா கடைகளில் கவரிங் மோதிரங்களை வாங்கி, நகை கடைக்கு சென்று, நகை வாங்குவது போல் நடித்து தான் வைத்திருக்கும் கவரிங் நகைகளை மாற்றி வைத்துவிட்டு, நூதன முறையில் தங்க மோதிரங்களை திருடியது தெரியவந்தது.
மேலும் தனது முதல் திருட்டில், கடையில் கவரிங் நகைகளை மாற்றி தங்க நகைகளை திருடும் முயற்சி வெற்றி பெற்றதால், முதல் முறை திருட்டில் பயன்படுத்தப்பட்ட பேண்டு, சர்ட் மற்றும் குல்லா ராசியானது என கருதிய கார்த்திக் அதே சட்டை, பேண்டை அணிந்து கிட்டத்தட்ட 7 கடைகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளார். விசாரணையை தொடர்ந்து கார்த்திக்கை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 8 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.