நல்ல குடிபோதை.. மதுக் கடையில் நண்பர்களுடன் அடிதடியில் குதித்த காவலர்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
Recommended Video
புதுவை: புதுவையில் தனியார் மதுபான கடை ஒன்றில் குடிபோதை தலைக்கேறிய நிலையில் தகராறில் ஈடுபட்ட காவலர் மற்றும் அவரது நண்பர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
மதுபான கடையில் நடந்த தகராறு குறித்து விசாரிக்க வந்த காவலரையும், குடிபோதையில் இருந்த காவலர் தன் நண்பர்களுடன் சரமாரியாக தாக்கியுள்ளார். இவை அனைத்துமே குறிப்பிட்ட தனியார் மதுபான கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ தற்போது பரவி வருவது புதுவை காவல்துறையினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காவல்துறையில் ஐ.ஆர்.பி.என் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். தனது நண்பர்கள் சபரிநாதன், வினோத், ராஜ், குமார் ஆகிய 4 பேருடன் சேர்ந்து பெரியகடை காவல் நிலையத்தற்குட்பட்ட தனியார் மதுபானக் கடை ஒன்றில் மது அருந்தி சென்றுள்ளார்.
அதன் பின்னர் நால்வரும் வயிறு முட்ட குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் இருந்துள்ளனர். குடித்த மதுவிற்கு பணம் கொடுக்குமாறு கடையில் கல்லாவில் இருந்தவர் அவர்களிடம் ரசீதை நீட்டியுள்ளார். அதனை வாங்கி பார்த்த குடிபோதை காவலர் மணிகண்டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மணிகண்டனின் நண்பர் ஒருவர் பர்ஸிலிருந்து காசை எடுக்க முற்பட்டார். அவரையும் தடுத்து நிறுத்திய மணிகண்டன், கடைக்காரருடன் தொடர்ந்து கடும் வாக்குவாதம் செய்தார். ஒருகட்டத்தில் குடித்த மதுவிற்கு பணமெல்லாம் கொடுக்க முடியாது என கூறி அங்கிருந்து மணிகண்டன் உட்பட அவர்கள் நண்பர்கள் நால்வரும் நடையை கட்டினர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் ஒழுங்காக குடித்த குடிக்கு பணத்தை கொடுத்து விட்டு போங்கள் என எச்சரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காவலர் மணிகண்டன் நான் ஒரு போலீஸ், என்னையேவா மிரட்டுகிறீர்கள் என கூறி பணம் கேட்ட கடை ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தகராறில் ஈடுட்டவர்கள் கடையை விட்டு நகராமல் பார்த்து கொண்டு விரைந்து போலீஸிற்கு தகவல் அளித்தனர். மதுக்கடை மேலாளர் காவல்நிலையத்திற்கு கொடுத்த தகவல் அடிப்படையில் உடனே பெரியகடை காவல்நிலைய காவலர் முருகன் அங்கு விரைந்து சென்றார்,
அங்கு நடைபெற்ற தகராறு குறித்து ஐ.ஆர்.பி.என். காவலர் மணிகண்டனிடம் விசாரணை நடத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து காவலர் முருகனை சரமாரிமாரியாக தாக்கினார். இதனால் அதிர்ச்சியடைநத் கடையில் இருந்தவர்கள் போலீஸ் முருகன் மீதான தாக்குதலை தடுக்க முற்பட்டனர்.
ஆனால் தடுக்க வந்த நபர்கள் அனைவரையுமே மணிகண்டன் கோஷ்டியினர் சரமாரியாக தாக்கினர். இதனால் அந்த இடமே போர்க்களமானது. போதையின் உச்சத்தில் இருந்த அவர்கள் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டில்களையும் தூக்கி போட்டு உடைக்க முயன்றனர்.
இதையறிந்த பெரியகடை போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் இருவர் மதுபானக்கடையில் தங்களுக்குள்ளே மோதிகொண்ட சம்பவம் புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.