கொரோனா பணியில் ஈடுபட்ட பெண் காவலர்களிடம் சேட்டை.. எஸ்பி அதிரடி கைது!
புதுச்சேரி: புதுச்சேரியில் பணியிலிருந்த பெண் காவலரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்பி மீது போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றி வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக, சாலைகள், முக்கிய சந்திப்புகள், சிக்னல், மார்க்கெட் என பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் போலீசாருடன் இணைந்து தனியார் நிறுவன பாதுகாவலர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி ஐ.ஆர்.பி.என் பிரிவு எஸ்.பி சுபாஷிக்கு திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு பணி ஒதுக்கபட்டிருந்தது. இந்நிலையில் அதே பகுதியில் பணியிலிருந்த ஊர்காவல்படை பெண் போலீசாரிடம் சுபாஷ், ஆபாசமாக நடந்துகொண்டதாக திருபுவனை காவல்நிலைய போலீசாருக்கு புகார் சென்றது. இதனையடுத்து திருபுவனை போலீசார் சம்பந்தப்பட்ட பெண் காவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் எஸ்.பி சுபாஷ் பெண் காவலர்களிடம் ஆபாசமாக நடந்துகொண்டது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து காவல்துறை தலைமையகம் உத்தரவின் பேரில், அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருபுவனை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் எஸ்.பி சுபாஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பாதுகாப்பு பணியில் ஆபாசமாக நடந்துகொண்டதற்காக, எஸ்.பி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.