கொரோனா போலி தகவல்கள்.. 100 வாட்ஸ் அப் குழுக்களை நீக்கிய சைபர் க்ரைம் போலீசார்!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 100 வாட்ஸ் அப் குழுக்களை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக நீக்கியுள்ளனர்.
உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா தொற்று குறித்து பல்வேறு தவறான தகவல்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் சமூக விரோதிகள் பரப்பி வருகின்றன. இத்தகைய தவறான தகவல்கள் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, சமூகத்தில் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க, புதுச்சேரி மாநிலத்தில் சைபர் க்ரைம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வாட்ஸ் அப் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பாக பரப்பப்படும் தகவல்களை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில், 10 போலீசார் கொண்ட சமூக வலைதள கண்காணிப்பு பிரிவானது கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாகவும், கொரோனா வைரசிற்கு மருந்துகள் கண்டுபிடித்துவிட்டதாகவும், மேலும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவை குறித்து வாட்ஸ் அப் மூலம் தவறான தகவல்களை பரப்பிய 100 வாட்ஸ்அப் குழுக்களை சைபர் க்ரைம் போலீசார் கண்காணித்து அழித்துள்ளனர். மேலும் தவறாக தகவல்களை பரப்பியவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பள்ளி உருவாக்கிய ஐஏஎஸ்.. கேரளாவில் கொரோனாவை விரட்டும் தமிழர்.. அசத்தும் திருவனந்தபுரம் கலெக்டர்
இதனிடையே பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்பினால், இந்திய தண்டனை சட்டம் 188 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 6 மாத சிறைதண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டுமென போலீசார் எச்சரித்துள்ளனர்.