ஏலச்சீட்டு மோசடி வழக்கில் கைது.. கடன் பிரச்சினை.. விரக்தியில் போலீஸ்காரர் தற்கொலை
புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்பத் தகராறில் போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது வயது 39. புதுச்சேரி காவல்துறையில் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு சவிதா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஏலச்சீட்டு மோசடியில் சுரேஷ் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் போலீஸ் பணியில் சேர்ந்தார். ஏலச்சீட்டு மோசடி வழக்கு தற்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சுரேஷ் தற்போது கடன் பிரச்சினையிலும் சிக்கி தவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக சுரேஷ் பணிக்கு செல்லாமல், விரத்தியுடன் இருந்து வந்த நிலையில், இடையன்சாவடி சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த பொதுமக்கள், லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சனையால் காவலர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.