புதுச்சேரியில் 452 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்.. சுற்றுலாத் தலங்களில் சிறப்பு ஏற்பாடு
புதுச்சேரி: புதுச்சேரியில் 452 மையங்கள் மூலம் 88 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க புதுச்சேரியில் 333, காரைக்காலில் 79, மாகியில் 18, ஏனாமில் 22 என மொத்தம் 452 மையங்கள் அமைக்கப்பட்டது.
நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பள்ளியில் அமைக்கபட்டுள்ள முகாமில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார்.
இன்று நடந்த சிறப்பு முகாமில் 2,000 சுகாதார ஊழியர்கள் சொட்டு மருந்து போடும் பணியில் ஈடுபட்டனர் மேலும் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை சாலை, மணக்குள விநாயகர் கோவில், தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, ஊசுட்டேரி மற்றும் சுண்ணாம்பார் படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி - தமிழக எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னிகோயில், திருக்கனுார் மற்றும் குருமாம்பேட் ஆகிய 6 இடங்களில், நடமாடும் போலியோ ஊர்தி மூலமும் முகாம் நடைபெற்றது. இங்கெல்லாம் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.