ரீசெட் செய்யாத விவிபாட்.. உடைக்க முயன்ற தேர்தல் அலுவலர்கள்.. கொந்தளித்த ஏஜென்டுகள்
புதுச்சேரி: புதுச்சேரியில் முகவர்கள் போட்ட மாதிரி ஓட்டுப்பதிவை அதிகாரிகள் ரீசெட் செய்யாமல் வாக்குபதிவு நடைபெற்றதால் குழப்பம் ஏற்பட்டது. பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. காமராஜர் தொகுதிக்குட்பட்ட வெங்கடா நகர் பகுதியில் உள்ள மின்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலையில் தொடங்கிய போது வேட்பாளர்களின் முகவர்கள் (ஏஜெண்ட்டுக்கள்) மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரம் சரியாக இயங்குகிறதா என சோதனை செய்தனர்.
அப்போது 50 க்கும் மேற்பட்ட மாதிரி வாக்குகளை செய்தனர். இதனைத்தொடர்ந்து விவிபேட் இயந்திரத்தில் இருந்த ஒப்புகை சீட்டை எடுக்காமல் வாக்குப்பதிவை நடத்தி உள்ளனர். இந்நிலையில் வாக்குசாவடி மையத்தில் இருந்த அதிகாரிகள் மதியம் விவிபேட் இயந்திரத்தில் இருந்து எடுக்காமல் இருந்த ஒப்புகை சீட்டை, எடுக்க முயன்றபோது அங்கு இருந்த தேர்தல் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டது. மேலும் வாக்களிக்க வந்தவர்கள் இந்த பிரச்சனையின் காரணமாக வாக்களிக்காமல் திரும்ப சென்றனர். இதனையடுத்து வேட்பாளர்களின் ஏஜெண்ட்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிய விவிபேட் இயந்திரம் பொருத்தி தேர்தல் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முகவர்கள் ஒப்புதல் அளித்ததால், புதிய விவிபாட் இயந்திரம் பொருத்தப்பட்ட மீண்டும் வக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. இச்சம்பவத்தால் வெங்கடா நகர் பகுதி வாக்கு சாவடி மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வாக்குப்பதிவு நேரத்தை மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை நீட்டித்து தேர்தல்துறை அதிகாரிகள் உத்தவிட்டுள்ளனர்.