போராடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்.. புதுவை மத்திய பல்கலைக்கழகம் உத்தரவு!
Recommended Video
புதுச்சேரி: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு, கவுன்சிலிங் அளிக்க வேண்டுமென பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறை தலைவர்களுக்கும் மாணவர் நலத்துறை அதிகாரி கடிதம் அனுப்பியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிப்பாணையை தீயிட்டு கொளுத்திய மாணவர்களுக்கும் பல்கலைக்கழக காவலர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்ட தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர் நலத்துறை அதிகாரி ஷாகின் சுல்தானா பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறை தலைவர்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனுமதியின்றியும், சட்டத் திருத்தத்திற்கு விரோதமாகவும், மாணவர்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பல்கலைக்கழத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆகவே துறை தலைவர் மூலம் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் நடத்த வேண்டும் என அனைத்து துறை தலைவர்களுக்கும் சுற்றரிக்கை அனுப்பியிருந்தார். இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் கடந்த 10 நாட்களாக பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
இதனிடையே குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை பார்த்து ஆத்திரமடைந்தத மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே உத்தரவு நகலை தீயிட்டு கொளுத்தினார்கள். இதனை தடுக்க வந்த பல்கலைக்கழக காவலர்களுக்கும், மாணவர்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டம் காரணமாக, பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரும் 26 ந் தேதி பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவிற்கு குடியரசு துணை தலைவர் வெங்கயா நாயுடு வரவுள்ள நிலையில், மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைவதால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பான சூழல் காணப்படுகின்றது.