சபாஷ் புதுச்சேரி.. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கையில் எடுக்க நாராயணசாமி உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரியில் நீர் நிலைகளை பாதுகாத்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மேலும் புதுச்சேரியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னைக்கு அருகில் இருக்கும் புதுச்சேரியிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக அரசிடம் தெரிவித்து வருகிறார்கள்.
புதுச்சேரியில் உள்ள முக்கிய ஏரியான ஊசுட்டேரி உட்பட பல்வேறு ஏரிகள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. ஆகவே புதுச்சேரியில் உள்ள நீர் நிலைகளைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீரை உயர்த்துவது தொடர்பாகவும், முதல்வர் நாராயணசாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமை செயலர் அஸ்வனி குமார் உள்ளிட்ட பல்வேறு துறை செயலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், வரும் காலங்களில் புதுச்சேரியில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரி அரசு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
புதுச்சேரியில் தரமான குடிநீரை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து ஏரிகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்வாரவும், மழை நீரை சேகரிக்கவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் காரைக்கால் துறைமுகத்தில் 55 ஆயிரம் டன் மணல் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளது. அது விற்பனைக்கு வரும்போது புதுச்சேரியில் மணல்தட்டுபாடு சரிசெய்யப்படும் என்றும், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு செய்ய வேண்டும் என அரசு புதிதாக வீடு கட்டுவோருக்கு வலியுறுத்தும் என நமச்சிவாயம் தெரிவித்தார்.