புதுவை பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து.. பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து. செய்முறை தேர்வு மற்றும் உள்மதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என புதுவை பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக புதுவை மத்திய பல்கலைகழக நிர்வாகம், ஏப்ரல் மற்றும் மே மாத நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைத்தது. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதால், புதுச்சேரி பல்கலைகழக நிர்வாகம், இணைப்பு கல்லுாரிகளில் உள்ள பொறியியல், மருத்துவம், சட்டம், நர்சிங் கல்லுாரிகளுக்கான செமஸ்டர் தேர்வை ஜூலையில் நடத்த முடிவு செய்திருந்தது. கொரோனா தாக்கம் உச்சத்தில் உள்ள நிலையில், பல்கலையின் முடிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து முதல்வர் நாராயணசாமி, பல்கலைகழக துணைவேந்தர் குர்மீந்த் சிங்கைத் தொடர்பு கொண்டு, மத்திய அரசு தேர்வு குறித்து எந்த அறிவிப்பும் வௌியிடாததால், தேர்வு அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதம் செமஸ்டர் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் இறுதியாண்டு தவிர்த்து மற்ற மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்து கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான பருவத் தேர்வையும் பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மேலும் செய்முறை தேர்வு மற்றும் உள்மதிப்பீட்டு (internal) மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி அறிவிக்கப்படும் என புதுவை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் லாசர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் பதற்றம்.. மகாராஷ்டிராவுடன் சீன வாகன உற்பத்தி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்