வெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்!
புதுச்சேரி: கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் பல்கலைக்கழக வளாகத்தில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் 60 க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களின் கல்வி கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவா்களுக்கு அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இலவசப் பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை பல்கலைக்கழக மாணவா்கள், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ளதால், நேற்றைய தினமே போராட்ட த்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வரும் நிலையில், 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக பல்கலைக்கழக வெள்ளி விழா ஆண்டு வளாகத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் சிறை வைக்கப்பட்டனர்.
மேலும் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள் தங்களை நியாயமான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்குமாறு, மத்திய ரிசர்வ் படை போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவியது.