கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு.. 22வது நாளாக புதுவையில் மாணவர்கள் போராட்டம்!
புதுச்சேரி: உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் இன்று 22 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தின் கல்வி கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவா்களுக்கு அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இலவசப் பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை பல்கலைக்கழக மாணவா்கள், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே 20 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பல்கலைக்கழகத்திற்கு வந்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வெள்ளி விழா ஆண்டு வளாகத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக சிறை வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து பட்டமளிப்பு விழா முடிவடைந்து, வெங்கையா நாயுடு பல்கலைக்கழகத்தைவிட்டு சென்றதும், மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து வெள்ளி விழா ஆண்டு வளாகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற மாணவர்கள், மீண்டும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
மாணவர்களின் போராட்டம் இன்று 22 வது நாளாக தொடர்ந்து வருகிறது. மேலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.