சிஏஏவுக்கு எதிராக புதுவை பல்கலை.யில் கண்ணன் கோபிநாத் பேச்சு.. ஏபிவிபி எதிர்ப்பு.. பரபரப்பு
புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்ணன் கோபிநாத் மாணவர்கள் மத்தியில் பேசுவதற்கு, ஏபிவிபி மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டம், பேரணி, மெழுகுவர்த்தி ஊர்வலம், மனிதசங்கிலி என பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரபிஹா என்ற பல்கலைக்கழக மாணவி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் தன்னுடைய தங்க பதக்கத்தை வாங்க மறுத்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று பல்கலைக்கழக வளாகத்தில் வகுப்புகளை புறக்கணித்து ஒரு சில மாணவர் அமைப்பினர் பல்கலைக்கழக வளாகத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் இந்த போராட்டத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதற்கு எதிர்ப்பு தனது ஐஏஎஸ் பதவியையே ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பாஜகவின் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் சிலர், புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு சம்பந்தமில்லாத மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்குள் போராட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் ஐஏஎஸ் கண்ணன் கோபிநாத் பாதியிலேயே போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். இதனையடுத்து போலீசார் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி கலையச் செய்தனர். எனினும் பல்கலைக்கழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.