ஜனாதிபதி பங்கேற்ற பட்டமளிப்பு.. ஹிஜாப் அணிந்த மாணவி வெளியேற்றம்.. பதக்கத்தை நிராகரித்தார்!
Recommended Video
புதுச்சேரி: புதுவை பல்கலைக்கழகத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் ஹிஜாப் அணிந்துவந்த இஸ்லாமிய மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை பல்கலைகழகத்தின் 27 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
முன்னதாக இதழியல் துறையில் முதுநிலை பட்டபடிப்பில் தங்க பதக்கம் வென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ரபியா பட்டமளிப்பு விழாவிற்கு தலையில் ஹீஜாப் அணிந்து வந்தார். அப்போது விழா அரங்கத்திலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மாணவி ரபியாவை தலையில் அணிந்திருந்த ஹீஜாப்பை அகற்ற கூறினர்.
அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், அவர் விழா அரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தார் அந்த மாணவி.
தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு பல்கலைக்கழகத்தை விட்டு சென்றதும், விழா அரங்கிற்கு மாணவி ரபியாவை அழைத்து பட்டத்தையும், தங்க பதக்கத்தையும் வழங்கினர். ஆனால் அரங்கத்திற்குள் அனுமதிக்காமல் அவமதித்ததற்கு கடும் எதிர்ப்பை துணைவேந்தரிடம் பதிவு செய்த அந்த மாணவி, தங்க பதக்கத்தை பெறாமல் நிராகரித்தார். பட்டத்தை மட்டும் பெற்றுக் கொண்டு சென்றார்.
ஹிஜாப் அணிந்துவந்த இஸ்லாமிய மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், அவர் தங்கப் பதக்கத்தை நிராகரித்ததும் புதுச்சேரியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி இதழியல் முதுகலைப் பிரிவில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெய்வ பக்தி நிறைந்தவர்களின் நிலம் புதுச்சேரி.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம்!