இரவில் ஏற்பட்ட மின்தடை.. ஒன்றரை மணி நேரம் இருளில் மூழ்கிய புதுச்சேரி.. பொதுமக்கள் அவதி
புதுச்சேரி: புதுச்சேரி நகரில் இரவு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் புதுச்சேரி நகரமே இருளில் மூழ்கியது.
புதுச்சேரி மாநிலத்திற்கு தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திலிருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. நெய்வேலியில் இருந்து வரும் மின்சாரம், புதுச்சேரியின் வில்லியனூர் துணை மின்நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து நகரப்பகுதியில் உள்ள மரப்பாலம் துணை மின் நிலையத்திற்கு மாற்றபட்டு, புதுச்சேரி முழுவதும் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் வில்லியனூர் துணை மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக புதுச்சேரி நகரம் முழுவதும் மற்றும் கிராமப்புறங்களில் ஒருசில இடங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் புதுச்சேரி நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதனையடுத்து மின்துறை ஊழியர்கள் உடனடியாக பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு, சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. அதாவது இரவு 8.30 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு 10.00 மணிக்கு வழங்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தலால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த மின்தடையால் மின்விசிறி, ஏசி உள்ளிட்ட எந்தவித மின் சாதனங்களும் ஓடாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் புதுச்சேரியில் பகல் நேரத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இரவில் ஏற்பட்ட மின்தடையால் மக்கள் புழுக்கத்தில் அவதிப்பட்டனர்.
இரவில் ஏற்பட்ட மின்தடை.. ஒன்றரை மணி நேரம் இருளில் மூழ்கிய #புதுச்சேரி நகரம்.. பொதுமக்கள் அவதி.. #Puducherry pic.twitter.com/vhB5xmxxss
— Oneindia Tamil (@thatsTamil) April 25, 2020
இதனிடையே ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுபானக் கடைகள் மற்றும் மதுபான குடோன்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இரவில் திடீரென ஏற்பட்ட மின்தடையை பயன்படுத்தி சமூக விரோதிகள் மதுபானக்கடைகளை உடைத்து மதுபானங்களை திருட வாய்ப்பிருந்ததால், ஒருசில மதுபான கடையின் வெளியே மின்சாரம் வரும்வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது