பிரக்யா சிங்கின் பேச்சு பாஜகவின் மனநிலையை காட்டுகிறது... முதல்வர் நாராயணசாமி சொல்கிறார்
புதுச்சேரி: பிரக்யா சிங்கின் பேச்சு பாஜகவின் மனநிலையை காட்டுகிறது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கோட்சே ஒரு தேசபக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் பேசியது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ள அவர், நாட்டு மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையில் பிரக்யா சிங்கின் பேச்சு உள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேசத்தின், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக, பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் நிறுத்தப்பட்டுள்ளார். மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர், காந்தியை சுட்டுக்கொன்ற நாதூரம் கோட்சே தேசபக்தர் என்றார்.
கோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு, தேர்தல் மூலம், தக்க பாடம் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். பிரக்யா சிங் தாக்கூர் கருத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோட்சே தீவிரவாதியா? அவர் ஒரு தேச பக்திமான்.. கமலை எச்சரிக்கும் சாத்வி பிரக்யா!
அதே நேரம், பிரக்யாவுக்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரக்யா கூறிய கருத்தை பாஜக ஏற்கவில்லை என்று செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கிடையே, போபால் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்கின் கருத்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் கூறினார். மேலும் நாதுராம் கோட்சே ஒரு கொலையாளி எனவும், அவரை போற்றுவது தேசபக்தியல்ல, தேசதுரோகம் என தெரிவித்தார்.