கொரோனாதான் முக்கியம்.. டெங்கு பாதித்த கர்ப்பிணிக்கு சிகிச்சை தாமதம்.. பலி.. புதுச்சேரியில்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனாவை காரணம் காட்டி, டெங்கு காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால், நிறைமாத கா்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு முழு கவனம் செலுத்தி வருவதால், அரசு மருத்துவமனைகளில் சாதாரண நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.
அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு வியாதிகளுக்கு சிகிச்சை பெற முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவை காரணம் காட்டி, டெங்கு காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் நிறைமாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு, டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா், கருணாகரப்பிள்ளை வீதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் - ரேவதி தம்பதியின் மகள் ராஜலட்சுமி (21). இவருக்கும், கடலூா் குள்ளஞ்சாவடியைச் சோ்ந்த கண்ணனுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் 9 மாத கா்ப்பிணியான ராஜலட்சுமி தனது தந்தை வீட்டில் தங்கியிருந்து, அவ்வப்போது ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளார். இதனிடையே, அவருக்கு கடந்த சில நாள்களாக தீவிர காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்துள்ளது. இதையடுத்து உறவினா்கள் அவரை புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது மருத்துவமனை நிர்வாகம், கொரோனா தொற்றை காரணம்காட்டி முறையாக சிகிச்சை அளிக்காமல், அவரை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் ராஜலட்சுமிக்கு, பரிசோதனை செய்ததில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
இதனைதொடர்ந்து அவர், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜலட்சுமிக்கு, குழந்தை வயிற்றிற்குள்ளேயே உயிரிழந்துள்ளது. தொடர்ந்து தாயும் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து உயிரிழந்த ராஜலட்சுமியின் தாயார் ரேவதி கூறுகையில், ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் எனது மகள் வழக்கம் போல தாய் மற்றும் குழந்தை நலன் குறித்து மருத்துவ பரிசோதனைப் பெற்று வந்தார். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தொடா்பான சிகிச்சைக்கு மட்டுமே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிா்வாகம் முன்னுரிமை அளித்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜலட்சுமிக்கு சரியாக மருத்துவம் பாா்க்காமல் அலட்சியமாக செயல்பட்டதாலேயே, அவா் உயிரிழந்துவிட்டதாக குற்றஞ்சாட்டினா்.
இது தொடா்பாக புதுவை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து ராஜலட்சுமியின் உறவினா்கள் அளித்த புகாரின்பேரில், தன்வந்திரி நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.