தெய்வ பக்தி நிறைந்தவர்களின் நிலம் புதுச்சேரி.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம்!
புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைகழகத்தின் 27 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
பெண்கள் அதிகளவில் தங்கப்பதக்கம் மற்றும் பட்டம் பெற்றுள்ளது எதிர்கால இந்தியாவை பிரதிபலிக்கும் செயல் என ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புதுவை மத்திய பல்கலைகழகத்தின் 27 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் கோகுல்கிருஷ்ணன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதலாவதாக பல்கலைகழக துணைவேந்தர் குர்மீத் சிங் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு, பட்டங்களையும், தங்கப் பதக்கங்களை வழங்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், புதுவை பல்கலைகழகத்தின் 27 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், புதுச்சேரி மாநிலம் கவிஞர்கள், தேசபக்தர்கள், தெய்வ பக்தி நிறைந்தவர்களின் நிலமாக உள்ளது. புதுச்சேரி உலகம் முழுவதும் அறியப்பட்டதற்கு காரணம் அரவிந்தரும், மகாகவி பாரதியும்தான் என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தூய்மை இந்தியா இயக்கத்தை முழுமையாக செயல்படுத்திய முதலாவது பல்கலைக்கழகமாக புதுச்சேரி பல்கலைக்கழகம் விளங்குகிறது. பட்டமளிப்பு விழாவில் பெண்கள் அதிகளவில் தங்கப்பதக்கம் மற்றும் பட்டம் பெற்றுள்ளது எதிர்கால இந்தியாவை பிரதிபலிக்கும் செயல் என்று பாராட்டினார். பட்டமளிப்பு விழாவு நிறைவு பெற்றதும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் மாளிகைக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார்.
இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை காலை புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்காலுக்கு செல்கிறார். அங்கு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் அவர், சனிபகவான் சன்னதியில் சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி புதுச்சேரியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முன்னதாக புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக இதழியல் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்ற மாணவி ரபியா, தங்கப்பதக்கத்தை திரும்ப அளித்தார். அரங்கத்திற்குள் அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பதக்கத்தை திரும்ப அளித்தார்.