புதுவை வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. மாணவர் அமைப்புகள் கண்காணிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வருகிற 23 ஆம் தேதி நடைபெறும் 27 ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்ற உள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் சுமார் 780 ஏக்கர் பரப்பளவில் 1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மத்திய பல்கலைக்கழகம். இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், பேராசிரியர் குர்மித் சிங் துணைவேந்தராகவும் இருக்கிறார்கள்.
பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், கணிதவியல், கணினி அறிவியல், தமிழ், ஹிந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், பொருளாதாரம் என 60 க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பல்கலைக்கழ
கத்தின் கீழ் 59 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதுதவிர, உறுப்புக் கல்லூரிகள், தொலைதூரக்கல்வி என மொத்தமாக 68 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்தியாவின் தலைச்சிறந்த பல்கலைக்கழகங்களில் புதுவை பல்கலைக்கழகமும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் புதுவை பல்கலைக்கழகத்தின் 27 வது பட்டமளிப்பு விழா வருகிற 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்ற உள்ளார். விழாவில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
குடியரசு தலைவரின் வருகையையொட்டி புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அண்மை காலமாக பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் ஒரு பிரிவினர் இந்தி திணிப்பு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 ஐ ரத்து செய்யப்பட்டது, இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை எதிர்த்தும், பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பல்கலைக்கழக வளாகம் எப்போதும் பரபரப்புடனே காணப்படுகிறது. குடியரசுத் தலைவர் வரும்போது மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க, மாணவர் அமைப்புகளின் நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.