புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.. மத்திய அமைச்சரவையின் பரிந்துரை ஏற்பு
புதுச்சேரி: காங்கிரஸ் அரசு ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் திடீரென அடுத்தடுத்து பதவி விலகியதால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை, சட்டப்பேரவையில் கடந்த 22-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார்.
முதல்வர் உரை முடிந்தவுடன் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். எனவே, புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த பிறகு, ஆளுநர் மாளிகையில் தமிழிசையை சந்தித்த முதல்வர், அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆளுநர் தமிழிசை அதனை ஏற்றுக் கொண்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, நாராயணசாமியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஏற்றுக்கொண்டார். பிறகு, புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலாகியுள்ளது.