புதுசா மொபைல் வாங்க போறீங்களா.. அப்போ உடனே புதுச்சேரி ஜெயிலுக்கு போங்க!
புதுச்சேரி: பணத்தை பெற்றுக்கொண்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன் விற்றுவந்த 4 சிறைக்காவலர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி ஆளுநர் மாளிகை, ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள விசாரணை கைதி டெல்லியை சேர்ந்த நித்திஷ்சர்மா மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சிறையில் இருந்து காவல்கட்டுபாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவது அம்பலமானது. இதனால் ஆத்திரமடைந்த சக விசாரணை கைதிகள் கனகராஜ், சுந்தர், பாம்ரவி, ரிஷி, சர்புதீன், ஜோதி, சுமன், சந்துரு ஆகியோர் சேர்ந்து நித்திஷ்சர்மாவை சரமாரியாக தாக்கினர்.
விசாரணைக் கைதிகள்
இதில் படுகாயமடைந்த நித்திஷ்சர்மா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து தாக்குதல் நடத்திய 8 விசாரணை கைதிகள் மீது, காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் மிரட்டல்
இந்நிலையில் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள கைதிகள், செல்போன் மூலம் மிரட்டி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு போலீசார் சிறையில் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான செல்போன்களும், சிம்கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
செல்போன் நடமாட்டம்
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான செல்போன்கள், சிறையில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறையை அதிர்ச்சிகுள்ளாக்கியது. சிறை கைதிகளிடம் சர்வசாதாரணமாக செல்போன் புழங்குவது குறித்து காவல்துறை தனது விசாரணையை தீவிரப்படுத்தியது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஒரு குரூப்பே இருக்கு
சிறையில் தனி ஒரு காவலரால் மட்டும் செல்போனை கொண்டு செல்ல முடியாது என்பதால், சிறைக்காவலர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு சிறையில் செல்போனை விற்றுவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு செல்போனை விலை 25 ஆயிரம் ரூபாய் தொடங்கி 1 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். சிம் கார்டு வேண்டுமென்றால், அதற்கு தனி சார்ஜ், அதாவது ஒரு சிம் கார்டை 10 ஆயிரம் ரூபாய் வரை விற்றுள்ளனர்.
சூப்பர் சேல்
விற்பனையை கச்சிதமாக முடித்ததும், கிடைக்கும் பணத்தை காவலர்கள் பங்கு போட்டுகொண்டுள்ளனர். இது இன்று நேற்று அல்ல பல வருடங்களாக நடைபெற்றுள்ளது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சிறையில் செல்போன்கள் தாராளமாக கிடைப்பதால், சிறிய ரவுடிகள் முதல் பெரிய ரவுடிகள் வரை, சிறைக்காவலர்களிடம் செல்போனை எளிதாக வாங்கி, சிறையில் இருந்தவாறே, பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
3 பேர் சஸ்பெண்ட்
இதையடுத்து கைதிகளுக்கு செல்போன் விற்ற சிறை காவலர்கள் சபரி, சங்கர், சீனு, ராமசந்திரன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இனிமேலாவது புதுச்சேரி காவல்துறை விழித்துக்கொண்டு, சிறையில் செல்போன் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.