கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பயங்கர மோதல்.. போர்க்களமான புதுச்சேரி!
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து கல்லூரி வளாகத்தில் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் குறித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஒரே வளாகத்தில் பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இரு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே ஈகோ பிரச்சினை இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று திடீரென பெரும் மோதல் வெடித்தது. மாலை கல்லூரி முடிந்து வெளியே வரும் போது, இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது பெரும் மோதலாக மாறியதால் இரு கல்லூரி மாணவர்களும் கற்கள், கட்டையால் பயங்கரமாக தாக்கி கொண்டனர்.
சரமாரியாக இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதனால் கல்லூரி வளாகம் போர்க்களம் போல காட்சி அளித்தது. இந்த மோதலில் இரு கல்லூரியை சேர்ந்த சுமார் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்த மோதல் சம்பவம் காரணமாக வில்லியனூர், உறுவையாறு, மங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் மோதல் சம்பவத்தை, கல்லூரி மாடியில் இருந்து செல்போன் மூலம், வீடியோ எடுத்த சில மாணவர்கள் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் புதுச்சேரி முழுவதும் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து மங்கலம் போலீசாரிடம் கேட்ட போது, கல்லூரி வளாகத்தில் நடந்துள்ள சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்து புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றும், புகார் வந்தால் வழக்குப்பதிவு செய்யபடும் எனவும், இருப்பினும் மேலும் எந்தவித அசம்பாவித சம்பவம் நடக்க கூடாது என்பதற்காக கல்லூரிக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.
சமீப காலமாக இதுபோல மாணவர்கள் வன்முறையைக் கையில் எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.