மாணவர்களுக்குள் மோதல்.. சண்டையை விலக்கி விட்ட பேராசிரியரின் மண்டை உடைந்தது!
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு கல்லூரியில் உதவி பேராசிரியரை மாணவர்கள் கல்லால் அடித்து தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு ஒட்டுமொத்த பேராசிரியர்களும் தர்ணாவில் ஈடுபட்டதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் தாகூர் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு 50 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் பாடம் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் இன்று இரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே பயங்கர ஆயுதங்களால் ஒருவருக்கொருவரை தாக்கிகொண்டுள்ளனர். மாணவர்களின் இந்த பிரச்சினையை விலக்கி விடுவதற்காக உதவிப் பேராசிரியர் சம்பத் என்பவர் முயற்சி செய்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த மாணவர்கள் சிலர் பேராசிரியர் சம்பத்தை முழு செங்கல்லால் குறி பார்த்து தாக்கியுள்ளனர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து பேராசிரியர் சம்பத்தை சக பேராசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
இதனையடுத்து தங்களுடைய உயிருக்கு பாதுகாப்பு கேட்டும், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஒட்டுமொத்த பேராசிரியர்களும் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அரசு கல்லூரி உதவி பேராசிரியரை மாணவர்களே கல்லால் அடித்து தாக்கியுள்ள சம்பவம் புதுச்சேரியில் உள்ள பிற கல்லூரியில் பணிபுரியக்கூடிய பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.