பாஜக.,வுக்கு எதிராக போராட்டம்... மாட்டுவண்டி ஓட்டிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி : பெட்ரோல்- டீசல் விலை உயர்வு காரணமாக பாஜக.,வை எதிர்த்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மாட்டுவண்டி ஓட்டி துவக்கி வைத்தார்.
உயரத்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலையை திரும்ப பெற கோரியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மாட்டுவண்டி, சைக்கிள் ரிக்ஷா பேரணி ஆர்ப்பாட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி மாட்டுவண்டி ஓட்டி துவக்கி வைத்தார்.
பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி உயர்த்தி வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது. மேலும் சரக்கு கட்டணம் உயர்ந்து, அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
எனவே டீசல், பெட்ரோல் விலை உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து தினசரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் செயல் தலைவர் விக்னேஷ் தலைமையில் AFT திடலில் இருந்து மாட்டுவண்டி மற்றும் சைக்கிள் ரிக்ஷாவில் ஊர்வலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மண் அடுப்பு வைத்தும் நூதன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முதலமைச்சர் நாராயணசாமி துவக்கி வைத்தார்.
இப்போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.