முதல்வரே தர்ணா செய்தால் எப்படி.. நாராயணசாமியை கைது செய்யுங்கள்.. புதுவை பாஜக தலைவர் ஆவேசம்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை கைது செய்ய பாஜக வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி: "அனுமதியின்றி ஆளுநர் மாளிகை முன்பு எப்படி தர்ணா நடத்தலாம், சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு முதல்வர்தான் முக்கிய காரணமே, அதனால் அவரை கைது செய்யுங்கள்" என்று புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்றிலிருந்து புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளார்.
அவரது தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று 2-வது நாளாக ஆளுநர் மாளிகை அருகிலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தடுப்பு கட்டைகள்
இந்நிலையில், தர்ணா போராட்டம் நடைபெறும் பகுதிக்கு அனுமதிக்கக் கூறி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் ஆளுநர் மாளிகை அருகே உள்ள தடுப்பு கட்டைகளை தள்ளி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பதற்றம் தொடர்கிறது
இதனையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கட்சி தொண்டர்களிடம் அமைதி காக்குமாறு கேட்டுகொண்டார். ஆனால் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்க மறுத்த தொண்டர்கள் கிரண்பேடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் ஆளுநர் மாளிகை அமைந்துள்ள பகுதி மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகிறது.
சுந்தரி நந்தா
இந்நிலையில், காங்கிரஸ் போராட்டம் நடத்திவருவதால், பாஜக இவ்விவகாரத்தில் இறங்கி உள்ளது. குறிப்பாக புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் காவல்துறை தலைவர் சுந்தரி நந்தாவை நேரில் சந்தித்து பேசினர்.
முதல்வர்தான் காரணம்
அப்போது, "அனுமதியின்றி ஆளுநர் எப்படி மாளிகையை முற்றுகையிடலாம்? தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அமர்ந்து தர்ணா செய்து வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு முதல்வர்தான் காரணம்.
ஆளுநர் மாளிகை
அதனால் அனுமதியின்றி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுள்ள முதல்வர், அமைச்சர்களை உடனே கைது செய்ய வேண்டும்" என்று பாஜக மாநில தலைவர் வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து பாஜகவும் காங்கிரசுக்கு எதிரான போராட்டத்தில் குதிக்கும் என தெரிகிறது.