நண்பனின் பிறந்த நாள்.. புதுச்சேரி பீச்சில் கேக் வெட்டிய பள்ளி மாணவர்கள்.. நடந்த துயரம்!
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் நண்பனின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு கடலில் இறங்கி குளித்த போது 12ம் வகுப்பு மாணவனை ராட்சத அலை இழுத்துச்சென்றது. இந்த சம்பவம் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் பாலாஜி. வில்லியனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று தனது பிறந்தநாளை நண்பர் களுடன் கொண்டாட விருப்பப்பட்டார்.
இதற்காக பாலாஜி தன்னுடன் படிக்கும் பள்ளி நண்பர்களான முத்திரையர் பாளையம் ஞானசேகர் மகன் புவியரசன் (வயது 17) உள்பட 7 பேருடன் தவளக்குப்பத்தை அடுத்துள்ள புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்றார்.
உற்சாகம்
அங்கு பாலாஜி தனது நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார். பின்னர் அவர்கள் அனைவரும் ஆறும்-கடலும் இணையும் இடத்தில் இறங்கி குளித்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை பாலாஜி, புவியரசன் ஆகியோரை கடலுக்குள் இழுத்துச் சென்றது.
மாயமான மாணவர்கள்
இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். இதை கேட்டு அங்கிருந்த மீனவர்கள் விரைந்து கடலுக்குள் குதித்து மாயமான 2 மாணவர்களையும் தேடினர்.
மாயமான புவியரசன்
இதில் தத்தளித்துகொண்டிருந்த பாலாஜியை உயிருடன் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மாயமான புவியரசனை தேடும் பணியில் தவளக்குப்பம் போலீசார், உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
போலீஸ் வழக்கு
இந்த சம்பவம் குறித்து தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மாணவர் கடலில் மூழ்கி மாயமானது சோகத்தை ஏற்படுத்தியது.