மதுகடை திறப்பு...ஸ்டாலினுக்கு எதிராக புதுவையில் அதிமுக கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம்
புதுச்சேரி: மதுக்கடைகள் திறப்பு விவகாரத்தில் மு.க.ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினர் கருப்பு பலூனை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளபோது தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது புதுச்சேரி மாநிலத்தல் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அரசு இன்று முதல் மதுபானக் கடைகளை திறந்துள்ளதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுபானக்கடைகளை திறக்கும் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டி புதுச்சேரியில் அதிமுகவினர் இன்று கருப்பு பலூனை பறக்க விட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மது விற்பனை கொள்கையில் இரட்டை வேடம் போடும் திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து புதுச்சேரி அதிமுக சார்பில் அதிமுக சட்டமன்ற கொறாடா வையாபுரி மணிகண்டன் தலைமையில் அதிமுகவினர் முத்தியால்பேட்டை பகுதியில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹாட்ஸ்பாட் பகுதிகளில் தீவிரம் காட்டாதது ஏன்.. பொதுமக்கள் கேள்வி.. கொரோனா பிடியில் சென்னை!
போராட்டம் குறித்து அதிமுக சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் கூறுகையில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தபோது அதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், தற்போது அவர்கள் ஆதரவுடன் புதுச்சேரியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு புதுச்சேரியில் மதுபான கடைகளை திறந்துள்ளதற்கு திமுக என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது என கேள்வி எழுப்பினார். உண்மையிலேயை மதுபான கடைகள் திறப்புக்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பது என்றால் புதுச்சேரி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் மக்களுக்காக போராடுவதாக கூறி ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ள திமுக மதுபானக்கடை திறப்பு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம்சாட்டினார்.