நிவர் புயலால் புதுவை, காரைக்காலில் கடல் சீற்றம்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு!
புதுச்சேரி: நிவர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு 36 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை பிற்பகல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய கூடும் என எச்சரித்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் புதுச்சேரி மாநிலம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியது. நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. அலைகள் வேகம் அதிகமாக உள்ளது. புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
இந்நிலையில் அரக்கோணத்தில் இருந்து 36 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு இரு குழுக்கள், இன்று அதிகாலை புதுச்சேரி வந்து உள்ளது. தற்போது அவர்கள் போலீஸ் பயிற்சி பள்ளியில் தங்கி உள்ளனர்.
புயல் எச்சரிக்கையாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.