மெல்ல வீசிய சாரல்.. புதுச்சேரியில் திடீர் மழை.. சுற்றுலா பயணிகள் செம ஹேப்பி பாஸ்!
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் மார்கழி மாதம் முடிந்த பிறகும் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மேலும் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் புதுச்சேரி நகரப் பகுதிகளான லெனின் வீதி, அண்ணா சாலை, நேரு வீதி, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிளான மடுகரை, திருக்கனூர், காலாப்பட்டு, கன்னியகோவில் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இந்த திடீர் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளும் கடற்கரை சாலை, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சாரல் மழையில் நனைந்தபடியே செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மழை இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் வந்த இந்த மழையால் புதுச்சேரியே ஜில்லாக மாறிக் காணப்படுகிறது.
அதேசமயம், சென்னையில் மழை வருமோ என்பது போன்ற கிளைமேட் நிலவுகிறது. வெயில் குறைந்து மோடமாக காணப்படுவதால் மக்கள் வானத்தைப் பார்த்தபடி காத்திருக்கின்றனர்.. மழை முத்தம் பெறுவதற்காக.