அதெப்படி பாஜக தலைமையில் ஆட்சி? அமித்ஷா பேச்சால் அதிருப்தி- கூட்டணியில் இருந்து விலகும் என்.ஆர்.காங்.
புதுச்சேரி: புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் விலக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ்; என்.ஆர்.காங்கிரஸ்- அதிமுக- பாஜக கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்கிற நிலை இருந்து வந்தது.
புதுச்சேரி பாஜக
இந்த நிலையில் புதுச்சேரியில் முதல்வராக இருந்த நாராயணசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஆட்சியை கவிழ்த்த காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்களாக இருந்தவர் அடுத்தடுத்து பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர்.
அமித்ஷா திட்டவட்டம்
இதனிடையே காரைக்காலில் 2 நாட்களுக்கு முன்னர் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அமித்ஷா, புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில்தான் ஆட்சி அமையும் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
என்.ஆர். காங். அதிருப்தி
புதுச்சேரியைப் பொறுத்தவரை பிற மாநிலங்களைப் போல காங்கிரஸ் கட்சித் தலைவர்களை கபளீகரம் செய்துதான் கட்சியை உருவாக்கி வைத்திருக்கிறது பாஜக. அப்படியான நிலையில் பாஜக தலைமையில் புதிய அரசு அமையும் என அமித்ஷா பேசியிருக்கிறார். இது என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
கூட்டணியில் இருந்து விலகல்?
ஆட்சி கவிழ்ப்புக்கு உறுதுணையாக இருந்த நம்மை கழற்றிவிட்டு பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என அமித்ஷா பேசியிருக்கக் கூடாது என்பது என்.ஆர். காங். நிலைப்பாடு. இந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் விலகுவது என முடிவு எடுத்துள்ளதாம். இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.