புதுச்சேரி: திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் ராஜினாமா- ஒரேநாளில் 2 பேர் பதவி விலகலால் பரபரப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் காங். எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணை தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் இன்று பதவி விலகியதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அரசுக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 13 ஆக குறைந்தது.
இதனைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசனும் தமது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதனால் புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பலம் 12 ஆக குறைந்துள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். இந்த நிலையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி: நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு-நான் ராஜினாமா செய்யவே இல்லை- ஆடியோ வெளியிட்ட விஜயவேணி எம்எல்ஏ
புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மொத்தம் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். தற்போதைய நிலையில் புதுச்சேரி சட்டசபையின் மொத்த பலம் 26. புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசுக்கு 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் நியமன உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் 14 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால் 3 நியமன எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் தரப்பு கணக்கில் எடுக்கக் கூடாது என வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.
திமுகவில்தான் நீடிப்பேன்
இதனிடையே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக பேட்டியளித்த வெங்கடேசன், தொகுதி மக்களுக்கு எந்த ஒரு நல்லதும் செய்ய முடியவில்லை. அதனால்தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கிறே.
அதேநேரத்தில் திமுகவில் தொடர்ந்து நீடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.