ஒரேநாளில் 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- புதுச்சேரியில் பெரும்பான்மையை இழந்தது காங். அரசு-அடுத்து என்ன?
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் பதவிகளை ராஜினாமா செய்ததால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமி அடுத்து என்ன செய்வார்? என்கிற எதிர்பார்ப்பும் பரபரப்பும் உருவாகி உள்ளது.
புதுச்சேரியில் இதுவரை மொத்தம் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ஒரு திமுக எம்.எல்.ஏ.வும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு 12 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.
பாஜக நியமன எம்.எல்.ஏக்கள்
அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு புதுவை சட்டசபையில் 14 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இவர்களில் 3 பேர் நியமன எம்.எல்.ஏக்கள். இந்த மூவருமே பாஜகவை சேர்ந்தவர்கள்.
உரிமை இல்லை
ஆனால் நியமன எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமை இல்லை என்கிறது முதல்வர் நாராயணசாமி அரசு. இதனால் தங்களது அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது; சட்டசபையில் நிரூபிப்போம் என்கிறது காங்கிரஸ். அதாவது 3 நியமன உறுப்பினர்களை கணக்கில் சேர்க்காமல் இருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு 12; எதிர்க்கட்சிகளுக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் என்கிறது காங்கிரஸ்.
நாராயணசாமி என்ன செய்வார்?
அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, நியமன எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்கலாம் என்கின்றனர் எதிர்க்கட்சி தலைவர்கள். தற்போதைய சூழ்நிலையில் பெரும்பான்மையை இழந்துவிட்டதால் சட்டசபை கூடுவதற்கு முன்னரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா நாராயணசாமி? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
நாளை சட்டசபை கூடுமா?
நியமன உறுப்பினர்கள் விவகாரத்தை முன்வைத்து இன்னமும் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என கூறி சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவாரா முதல்வர் நாராயணசாமி என்பது இன்னொரு கேள்வி. இது தொடர்பாக சபாநாயகர் சிவக்கொழுந்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.