கொரோனாவிலும் கூடும் புதுச்சேரி சட்டப்பேரவை.. வருகின்ற 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்..
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் வரும் 30 ந்தேதி கூடுகின்றது. அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்கின்றார்.
Recommended Video
புதுச்சேரி சட்டப்பேரவையின் கூட்டம் வரும் 30 ந்தேதி காலை 9.30 க்கு கூடவுள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் வின்செண்ட் ராயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கடந்த 9 ஆண்டுகளாக மார்ச் 31 க்குள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு மத்திய அரசின் நிதியை பெற்ற பின்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வது வழக்கமாகி வருகின்றது.
இந்நிலையில் வரும் 30 ந் தேதி கூடவுள்ள பேரவை கூட்டத்தில் நிதிப்பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி, அரசின் அடுத்த நான்கு மாத செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேரவையில் ஒப்புதல் பெற உள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நடைபெறவுள்ள பேரவை கூட்டத்தை விரைந்து முடிக்க உள்ளார்கள்.
மேலும் கொரோனா தொற்றை தவிர்க்க, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மிகக்குறைந்த நேரம் மட்டுமே நடைபெறவுள்ள பேரவை கூட்டத்தில் பேரவைக்குள் உள்ளேயும், வெளியேவும் பல புதிய கட்டுப்பாடுகளை விதிக்க சட்டப்பேரவை நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.