காஞ்சிபுரத்தில் ஒரே கூட்டம்.. புதுச்சேரி அத்திவரதரை தரிசிக்க திரும்பும் பக்தர்கள்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி அத்திவரதர் கோவிலுக்கு சமீப நாட்களாக கூட்டம் கூடி வருகிறதாம்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் வெளியில் எடுக்கப்படுகிறார். தொடர்ந்து 48 நாட்கள் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். பின்னர் குளத்து நீருக்கடியில் அத்திரவதர் வைக்கப்படுகிறார்.
அத்திவரதரை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் காஞ்சிபுரமே மக்கள் வெள்ளத்தில் காணப்படுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க முடியாத பக்தர்கள் தற்போது புதுச்சேரியில் உள்ள அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். சுமார் 200 ஆண்டு பழமையான ராமானுஜர் பஜனை மடம் புதுச்சேரி செயின்ட் தெரசா வீதியில் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத அனந்தரங்கநாதர் சன்னதி உள்ளது. ஆதிசேஷன் மீது அனந்த சயன கோலத்தில் 6 அடி நீளத்தில் அத்திமரத்தில் அனந்தரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.
கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள இவர் கையில் சங்கு, சக்கராயுதம் ஏந்தியுள்ளார். இந்த சிலை 2011 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் 2 முறை அரங்க நாதருக்கு தைலக்காப்பு செய்து பாதுகாத்து வரப்படுகிறது. புதுச்சேரியில் இங்கு மட்டுமே அத்திமரத்திலான அனந்த ரங்கநாதரை தரிசிக்கலாம். மாதந்தோறும் ரேவதி, திருவாதிரை நட்சத்திர நாட்களில் சிறப்பு வழிபாடு உண்டு.
சுக்கிர திசையில் பாதிப்பு உள்ளோர், திருமண தடையுள்ளோர் வெள்ளியன்று நெய்தீபம் ஏற்றி பெருமாளை பிரார்த்தித்தால் பலன் நிச்சயம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க முடியாத பக்தர்கள் புதுச்சேரியில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் புதுச்சேரி அத்திவரதர் தற்போது பிரபலமடைந்து வருகின்றார்.