67 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட புதுச்சேரி கடற்கரை சாலை.. பொதுமக்கள் ஹேப்பி
புதுச்சேரி: பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்த புதுச்சேரி கடற்கரை சாலை இரண்டு மாதத்திற்கு பிறகு இன்று காலை திறக்கப்பட்டது. 67 நாட்களுக்கு பிறகு ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.
Recommended Video
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வரும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் கடற்கரை சாலை, கொரோனா வைரசால் மத்திய அரசு அறிவித்த பொது முடக்கத்திற்கு பிறகு மூடப்பட்டது. மேலும் பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல முடியாதபடி கடற்கரை சாலையின் அனைத்து நுழைவு வாயில்களும் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் 5-வது முறையாக பொதுமுடக்கத்தை நீட்டித்த மத்திய அரசு, 5 ஆம் கட்ட பொதுமுடக்கத்தில் தளர்வுகளை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கியது. இதனையடுத்து நேற்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு தளர்வுகள் அளித்து அறிவிப்பு வெளியானது. அதில் ஒன்றுதான் புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் திறக்கப்படும் என்பது.
இதனையடுத்து 67 நாட்களுக்கு பிறகு இன்று காலை புதுச்சேரி கடற்கரை சாலை திறக்கப்பட்டது. இதனால் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு மகிழ்ந்தனர். வாட்டி வதைக்கும் வெப்பத்தை தணிக்க புதுச்சேரி கடற்கரையைதான் மாலை நேரத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். தற்போது கடற்கரை திறக்கப்பட்டது பொதுமக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.