புதுச்சேரி: ஒரு ராஜ்யசபா எம்.பி.சீட்டுக்காக அடித்து கொள்ளும் அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ்!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே ஒரு ராஜ்யசபா எம்.பி. இடத்துக்காக என்.ஆர்.காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, அதிமுக ஆகிய கூட்டணி கட்சிகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. இந்த பஞ்சாயத்துகளுக்கு நடுவே இன்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி சந்தித்தார்.
புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த அதிமுகவின் கோகுலகிருஷ்ணன் பதவிக் காலம் முடிவடைகிறது. இந்த ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு அக்டோபர் 4-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி இருந்து வருகிறார்.
மேகதாது அணைக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்.. முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்தார்
பாஜக பிடிவாதம்
ஒரு ராஜ்யசபா சீட்டையும் தங்களுக்கே தர வேண்டும் என முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது பா.ஜ.க. இது தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதனை ரங்கசாமியிடம் பாஜகவினர் கொடுத்தனர். ஆனால் நியமன எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு; ராஜ்யசபா சீட்டும் பாஜகவுக்கா? என கொதிக்கிறது என்.ஆர்.காங்கிரஸ்.
டெல்லி விசிட்
இதனால் முதல்வர் ரங்கசாமி கனத்த மவுனத்துடன் இருந்து வருகிறார். இதனிடையே பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேற்று மீண்டும் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போதும் பாஜகவுக்குதான் ஒரு ராஜ்யசபாசீட்டையும் தர வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால் ரங்கசாமி தரப்போ, டெல்லி மேலிடத்துடன் பேசிக் கொள்கிறேன் என கூறி அவர்களை வழி அனுப்பி வைத்துவிட்டார். இதையடுத்து பாஜக மேலிடத்திடம் ரங்கசாமி மீது புகார் கூறுவதற்காக புதுச்சேரி பாஜக தலைவர்கள் டெலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சீட் கேட்கும் அதிமுக
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் எந்த ஒரு தொகுதியிலும் ஜெயிக்காமல் படுதோல்வி அடைந்த அதிமுகவும் இப்போது கோதாவில் குதித்துள்ளது. நியமன எம்.எல்.ஏ பதவிதான் தரவில்லை.. ராஜ்யசபா சீட்டாவது கொடுங்க என்கிறது அதிமுக. இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியை புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் நேரில் சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தார்.
லாஜிக்காக கேட்கும் அதிமுக
அந்த கடிதத்தில், சட்டசபைத் தேர்தலில் அதிமுக, என்.ஆர்.காங்., பாஜக கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்டோம். 4 எம்.எல்.ஏக்களுடன் 18% வாக்கு தகுதியில் இருந்த அதிமுகவிற்கு குறைந்த இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையிலும், பல்வேறு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நம் கூட்டணியை அதிமுக உறுதி செய்தது. தாங்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு நியமனம் செய்யப்பட்ட 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களில் அதிமுகவிற்கு இடம் அளிக்கவில்லை. கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியில் அமர்ந்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் நம் கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியை நாம் பெற்றுள்ளோம். தற்போது புதுச்சேரியில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கோகுலகிருஷ்ணன் பதவிக் காலம் முடிவடைந்து, அப்பதவிக்குத் தேர்தலும் நடைபெறவுள்ளது. சட்டப்பேரவையில் அதிமுகவிற்கு பிரதிநிதித்துவம் இல்லாத சூழ்நிலையில் ஏற்கெனவே அதிமுக சார்பில் இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுகவிற்கு வழங்க தாங்கள் உரிய வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் அன்பழகன்.
ஆளுநர்-முதல்வர் ஆலோசனை
இதனிடையே இன்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை திடீரென முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக பேசப்பட்டதா? என்ற கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி தரப்பில் பதில் எதுவும் தரப்படவில்லை. அதேநேரத்தில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளை உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தி சிகிச்சை தருவது தொடர்பாக ஆளுநரும், முதல்வரும் ஆலோசித்தனர். புதுச்சேரியை வருங்காலத்தில் மருத்துவத் தலைநகரமாக மேம்படுத்தவும், மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கவும் பேசினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.