அமைச்சர் பதவி...புதுச்சேரியில் பாஜகவின் அப்பா, மகன் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவா? அதிர்ச்சியில் டெல்லி
புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் பதவி விவகாரத்தில் அதிருப்தி அடைந்திருக்கும் பாஜகவின் ஜான்குமார், அவரது மகன் விவிலின் ரிச்சர்ஸ் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்யலாம் என வெளியான தகவல்களால் டெல்லி மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சோ கால்ட் சாணக்கியர்களுக்கு சவால்.. உ.பி, கர்நாடகா, கோவா, மே.வங்கம், திரிபுரா பாஜகவில் கலக குரல்கள்!
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்று ஆட்சியை பிடித்தது. புதுச்சேரி முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றும் இன்னமும் அமைச்சரவை உருவாக்கப்படவில்லை.
'ராமர்' 'சீதை ' போலவே 'யோகா'வும் எங்களுடையதுதான்.. நேபாள பிரதமர் ஷர்மா ஒலி மீண்டும் சர்ச்சை பேச்சு
புதுச்சேரியில் வரும் 25-ந் தேதி அமைச்சரவை பதவி ஏற்கும் என கூறப்படுகிறது. பாஜகவுக்கு 2 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவி மட்டுமே தர முடியும் என்பதில் முதல்வர் ரங்கசாமி உறுதியாக இருந்தார். இதனால் வேறுவழியே இல்லாமல் பாஜகவும் இதனை ஏற்றுக் கொண்டது.
யாருக்கு அமைச்சர் பதவி
ஆனால் பாஜகவின் 6 எம்.எல்.ஏக்களில் எந்த 2 பேருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பதில்தான் சிக்கல் எழுந்தது. முந்தைய நாராயணசாமி அரசை கவிழ்த்தவர்களில் முக்கியமானவரான ஜான்குமாரும் அவரது மகனும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றனர். இதனால் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி தரப்படும் என முதலில் உறுதி அளித்தது பாஜக.
ஜான்குமார் ஆதரவாளர்கள் போராட்டம்
தற்போது திடீரென பாஜகவின் சாய் சரவணகுமாருக்கு அமைச்சர் பதவி என கூறிவிட்டது டெல்லி மேலிடம். இதில் கடுப்பாகிப் போன ஜான்குமார் தமது பலத்தை காட்டும் வகையில் ஆதரவாளர்களை போராட்டத்தில் இறக்கி உள்ளார். புதுச்சேரி பாஜக அலுவலகத்தை ஜான்குமார் ஆதரவாளர்கள் சூறையாடினர். நேற்று கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.
அப்பா, மகன் ராஜினாமா?
இருந்த போது டெல்லி பாஜக மேலிடம் இறங்கி வருவதாக இல்லை. இதனால் உச்சகட்ட அதிருப்தியில் இருக்கும் ஜான்குமார் இன்று தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் ஜான்குமாரும் அவரது மகன் விவிலின் ரிச்சர்ஸும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் அறிவிப்பை வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி மேலிடம் அதிர்ச்சி
புதுச்சேரியில் தங்களது 6 எம்.எல்.ஏக்கள், 3 சுயேட்சைகள், 3 நியமன எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் தனித்தே ஆட்சி அமைக்கும் கனவில் பாஜக இருந்து வந்தது. இதனை காரணம் காட்டியே என்.ஆர். காங்கிரஸுக்கு நெருக்கடியும் கொடுத்தது பாஜக. ஆனால் இப்போது பாஜகவின் 2 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால் தங்களது தனித்து ஆட்சி அமைக்கும் கனவு தகர்ந்து போய்விடும் என்பதால் டெல்லி மேலிடம் அதிர்ந்து போயுள்ளதாம்.
சமாதானம் பேசுமா பாஜக மேலிடம்?
சாய் சரவணகுமார் ஒரு குறிப்பிட்ட காலம் அமைச்சராக இருக்கட்டும்; அதன்பின்னர் உங்களுக்குதான் அமைச்சர் பதவி என டெல்லி மேலிடம் ஏற்கனவே ஜான்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தமக்கே முதலில் அமைச்சர் பதவி தர வேண்டும் என்றார் ஜான்குமார். தற்போது ராஜினாமா முடிவை ஜான்குமார் அறிவித்தால் டெல்லி பாஜக தலைவர்கள் அவரை சமாதானப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் புதுச்சேரி தகவல்கள் தெரிவிக்கின்றன.