புதுச்சேரி காவிரி டெல்டா.. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. சட்டசபையில் தீர்மானம்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பாகூர் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்பட்டு, தனிச்சட்டம் இயற்றப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
மேலும் இப்பகுதிகளில் புதிதாக ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று கூடிய சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், விவசாயத்தை காக்கவும், விவசாயம் சார்ந்த தொழில்களை வளப்படுத்தவும், காவிரி கடைமடைப்பகுதியான காரைக்கால் மாவட்டத்தையும், புதுச்சேரி பாகூர் பகுதியையும் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தீர்மானத்தை வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பேரவையில் முன்மொழிந்தார்.
அமைச்சர் கொண்டு வந்த அந்த தீர்மானத்தில், கடந்த 16.01.2020 அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சுற்றுச்சூழல் முன் அனுமதியினைப் பெறத் தேவையில்லை என்று சட்ட விதிகளை திருத்தி வெளியிட்டுள்ளது. இந்த திருத்த அறிவிக்கையை வெளியிடுவதற்கு முன்பு புதுச்சேரி மாநில அரசிடமோ, பொதுமக்களிடமோ கருத்துக்களை கேட்காதது ஒரு தலைபட்சமானது.
காரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை அமல்படுத்துவது அம்மாவட்டத்தினை பாலைவனமாக்கும் செயல் மட்டுமன்றி விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்க்கையையும் ஒருசேர அழிப்பதற்கு ஒப்பானதாகும்.
ஆகவே மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் 16.01.2020 அறிவிக்கையினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பேரவையில் முன்மொழிந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்த பின்னர், தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் முடிவடைந்தது. பேரவையை காலவரையின்றி ஒத்திவைத்தார் சபாநாயகர் சிவகொழுந்து.