புதுச்சேரி விடுதலை நாள்.. வண்ண மிகு விழா.. கொடியேற்றி கொண்டாட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை நாளையொட்டி கடற்கரை சாலையில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.
பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு 1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந்தேதி விடுதலை கிடைத்தது. இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி விடுதலை நாளாக அரசு கொண்டாடி வருகிறது.
இன்று புதுச்சேரி விடுதலை நாளையொட்டி கடற்கரை சாலையில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி தேசியகொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவை முடித்துகொண்டு சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.
இன்று விடுதலை நாளையொட்டி புதுச்சேரி மாநிலத்திற்கு அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இதே போல் புதுச்சேரியில் தலைவர்கள் சிலைகள், ஆளுநர் மாளிகை, தலைமை செயலகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றம் உள்ளிட்ட, அரசுகட்டிடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.