புதுவையிலும் வெடித்தது போராட்டம்.. மாணவர்கள் ஸ்டிரைக்... ஜனாதிபதி வரும் நேரத்தில் டென்ஷன்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகளை நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. வன்முறை தொடர்ந்தால் வழக்கை விசாரிக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் டெல்லி வன்முறையை கண்டித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும், மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே வருகின்ற 23 ஆம் தேதி புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்ற உள்ளார்.
குடியரசு தலைவர் வர உள்ள நிலையில், மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என கருதி, மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்கலைக்கழக நிர்வாகமும், போலீசாரும் மாணவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.