பெரியார் குறித்து நீங்க பேசியது வருத்தமளிக்கிறது ரஜினி.. திரும்பபெறுங்க.. நாராயணசாமி
புதுச்சேரி: தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்களை, திரும்பப்பெற்று சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்றும், இந்த சர்ச்சையில் ரஜினி தலையிடாமல் இருப்பது நல்லது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.
துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தந்தை பெரியார் பற்றி கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஹாட் டாபிக் இதுவென்றே கூறலாம். ரஜினியின் கருத்துக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் பாஜக உள்ளிட்ட இந்து மத இயக்கங்கள் ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, ரஜினிக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். மேலும் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள, ரஜினி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு... தந்தை பெரியார் மிகப் பெரும் தலைவர்... ஹைகோர்ட் நீதிபதி ராஜமாணிக்கம்
மேலும் அசாம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமலிக்க ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தந்தை பெரியார் குறித்து தான் கூறிய கருத்து உண்மைதான் என்றும், தான் கூறிய கருத்தை திரும்ப பெறப்போவதில்லைை என ரஜினி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் தந்தை பெரியார் பற்றி ரஜினி பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, மூட நம்பிக்கையை தூக்கி வீச தன் வாழ்நாளை அர்பணித்தவர் பெரியார். நடிகர் ரஜினிகாந்த் ஒரு விழாவில் பேசும்போது, பெரியாரை விமர்சனம் செய்து இருக்கிறார். எந்தவித முகாந்திரமும் இல்லாமல் ரஜினிகாந்த் பேசியிருப்பது வருத்தம் அளிக்கிறது.
எனவே பெரியார் குறித்து கூறிய கருத்துக்களை, ரஜினிகாந்த் திரும்பப்பெற்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மேலும் இந்த சர்ச்சையில் அவர் தலையிடாமல் இருப்பது நல்லது. பெரியார், திக குறித்த கருத்துக்களை ரஜினிகாந்த் திரும்ப பெற்றால் அவரது பெருந்தன்மைக்கு நல்லது என தெரிவித்துள்ளார்.