காங். எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்.. ஊழலை நிரூபித்தால் பதவி விலகுகிறேன்.. நாராயணசாமி சவால்!
புதுச்சேரி: பாகூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைவர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் பதவி விலகுகின்றேன் இல்லையெனில் கிரண்பேடி தனது பொதுவாழ்க்கையை விட்டு விலக வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் பாகூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு. இவர் பல மாதங்களாக ஆட்சியின் மீது அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் இவர் காங்கிரஸ் அரசு மீதும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
மேலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஊழல் குறித்து கட்சியின் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து ஆதாரத்துடன் புகார் அளிக்க உள்ளதாகவும் தனவேலு வெளிப்படையாக பேசியிருந்தார்.
எத்தனை நாளைக்கு ஸ்டைலே பண்ணிக்கிட்டு இருப்பீங்க?
இதுமட்டுமின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராஜ்நிவாசில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்த தனவேலு, முதலமைச்சர் நாராயணசாமியும், அவருடைய மகனும் சேர்ந்து நிலபேர ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதன்மீது நடவடிக்கை எடுக்குமாறு கிரண்பேடியிடம் புகார் அளித்து புதுச்சேரி அரசியலில் மேலும் புயலை கிளப்பினார். தனவேலு புகாரை பெற்று கொண்ட கிரண்பேடி இதுகுறித்து சிபிஐயிடம் புகார் அளிக்குமாறு தனவேலுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் இன்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி, தொடர்ந்து கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளிலும், ஆட்சி கவிழ்க்கும் சதிச்செயலிலும் ஈடுபட்டு வந்த காங்கிரசை சேர்ந்த பாகூர் எம்.எல்.ஏ தனவேலு பற்றி அகில இந்திய தலைமையில் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவித்த நமச்சிவாயம், அதன்படி யார் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாலும் கட்சி அதை வேடிக்கை பார்க்காது என்றும், அதன்படி கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட பாகூர் எம்.எல்.ஏவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் தனவேலு கட்சிக்கு எதிராக செயல்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறினார்.
நமச்சிவாயத்தை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, தனது மீதும், தன் மகன் மீதும் நில ஊழல் புகாரை எம்.எல்.ஏ தனவேலு கொடுத்ததாக சமூக வலைதளங்களில் கிரண்பேடி வெளியிட்டது, தன் மீதான காழ்புணர்ச்சியே என குற்றச்சாட்டினார். மேலும் தனது மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஆளுநர் கிரண்பேடி நிரூபித்தால் நான் பதவி விலகுகின்றேன் என்று கூறிய அவர், இல்லையெனில் தனது பொது வாழ்க்கையில் இருந்து கிரண்பேடி விலகிடுவாரா என நாராயணசாமி கிரண்பேடிக்கு சவால் விடுத்தார்.