சூழ்ந்த வெள்ளம்.. காலையிலேயே களம் இறங்கிய முதல்வர்.. அதிரடி பேட்டி
புதுச்சேரி; நிவர் புயலால் புதுச்சேரியில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
வங்ககடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி மரக்காணம் இடையே இன்று அதிகாலை 2மணி அளவில் கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி, கடலூரில் இடைவிடாமல் கனமழை பெய்தது.
கனமழையாலும், சூறாவளி காற்றாலும் நிவர் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் கன மழையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியின் முக்கிய சாலைகளான புஸ்சி வீதி,
இந்திராகாந்தி சந்திப்பு மற்றும் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, சென்னை கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சாலைகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நீரில் ஊர்ந்து செல்கின்றன. இதேபோல் பலத்த காற்றின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் தாழ்வான பகுதிகளிலும், அங்குள்ள வீடுகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வசிக்கும் எல்லையம்மன் கோயில் வீதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் புதுவையின் மையப்பகுதிகளில் உள்ள பாரதி வீதி, புஸ்சி வீதி, பாரதி வீதி பல சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
புதுச்சேரியை புரட்டிபோட்ட நிவர்.. முதல்வர் நாராயணசாமி வசிக்கும் வீட்டை சுற்றி சூழந்தது வெள்ளம்
இந்நிலையில் காலையிலேயே வீட்டை விட்டு வெளியே வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் புதுவை முதல்வர் நாராயணசாமி, நிவர் புயலால் புதுச்சேரியில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றார்.
புதுச்சேரியில் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை கடலில் கொண்டு சேர்க்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மின்சாரம் படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் , அதுகுறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்த புயலில் புதுச்சேரியில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதற்கு மக்கள் கொடுத்த ஒத்துழைப்புதான் காரணம் என பாராட்டினார்.