கலவரத்தைப் பற்றி கவலைப்படாமல் உள்ளது பாஜக.. நாராயணசாமி சாடல்
புதுச்சேரி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தால் பல்வேறு மாநிலங்களில் வன்முறைகள் பற்றி எரிவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள தவறான கொள்கைகளால் பல்வேறு மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இவற்றை தடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பாஜக அரசு நாட்டைப்பற்றி சிந்திக்காமல், ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்காளம், மேகாலயா, திரிபுரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் வன்முறை பற்றி எரிவதாகவும், டெல்லியில் தற்போது மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நாராயணசாமி, வன்முறையை கட்டுப்படுத்த உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
சிலைக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு 14 ஆண்டுகள் ஜெயில்.. சட்டம் கோரி ஹைகோர்டில் வழக்கு
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்துவதற்கான வேலையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செய்து வருவதாகவும், ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கிரண்பேடி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், எனவே தார்மீக பொறுப்பேற்று கிரண்பேடி ராஜினாமா செய்ய வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு நிச்சயம் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்திய நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் மத ரீதியாகவும், இன ரீதியாக பிரவினையை உருவாக்குவதாகக் கூறி, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, மாணவர் கூட்டமைப்பினர் புதுச்சேரி கடற்கரையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நகலுக்கு கருமாதி செய்து, ஒப்பாரி வைத்து அழுது, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கடலில் கரைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப வெறவில்லை என்றால் அனைத்து மாணவர்களையும் ஒன்று திரட்டி புதுச்சேரி முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என மாணவர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.