வாழ்த்துகள் சார்.. உங்களுக்கு கொரோனா இல்லை.. நாராயணசாமிக்கு நல்ல சேதி சொன்ன டாக்டர்ஸ்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதற்கிடையே நாள்தோறும் சந்தேகப்படும்படியான நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் தினந்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து அறியும் வகையில், அவர்களுக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்தது.
அதன்படி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு சுகாதாரத்துறையினர் நேற்று கொரோனா சோதனை மேற்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் உமிழ்நீர் எடுக்கப்பட்டு, சோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானது.
இது குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, அமைச்சர்கள் உள்ளிட்ட 21 பேருக்கும் மற்றும் வெளியே சந்தேகிக்கும் நபர்கள் 35 பேர் என மொத்தம் 56 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
புதுச்சேரியில் இதுவரை கொரோனா சமூகத்தொற்றாக மாறவில்லை. இருப்பினும் அண்டை மாநிலமான தமிழக பகுதிகளான விழுப்புரம் மற்றும் கடலூர் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் புதுச்சேரி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். புதுச்சேரியில் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 3 பேருக்கு இரண்டாவது முறை மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உள்ளதென வந்துள்ளதால் அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெறுவார்கள் என தெரிவித்தார்.
மேலும் மத்தியபிரதேசத்தில் இருந்து கொரோனா பாதிப்பு சந்தேகிக்கப்பட்ட 1,500 நபர்களின் உமிழ்நீர் மாதிரிகள் தனி விமானம் மூலம் புதுச்சேரி விமானம் நிலையம் வந்தது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறை பாதுகாப்புடன் உமிழ்நீர் மாதிரிகள் ஜிப்மர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.