8 மணி நேரம்தான் வேலை.. அதுக்கு மேல போனா டபுள் சம்பளம் குடுக்கனும்.. நாராயணசாமி உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்றும், இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், பணிபுரிந்தவர்கள் 50 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் வேலையில்லாத நாட்களில் காய்கறி வியாபாரம் செய்பவராக தெரிகிறது. இதற்காக கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மாநில அரசின் சார்பாக 8 மணி நேரம் வேலை என்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு மேல் பணியாளர்கள் அதிக நேரம் பணிபுரிந்தால் இரட்டிப்பு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நலச் சட்டத்தில் இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு அமைச்சர் கந்தசாமியும், நானும் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
அதற்கு மேல் அதிக நேரம் பணிபுரிபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியத்தை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் அறிவித்தோம். இது எங்களுடைய அரசாணையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தான் நாங்கள் உறுதி செய்துள்ளோமே தவிர 12 மணி நேரம் வேலை என்ற முறையை நாங்கள் கூறவில்லை. இது தனியார் நிறுவனங்களில் கூட நடைமுறையில் உள்ளது.
பிரதமர் மோடி ஆற்றிய உரையில், நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக ரூ.20 லட்சம் கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே ரூ.1.70 ஆயிரம் கோடி மூலம் பிரதமர் வறுமை ஒழிப்பு திட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். ரிசர்வ் வங்கியானது தொழிற்சாலைகளுக்கு பல சலுகைகளை வழங்கியது. இப்படி பல சலுகைகளை மத்திய அரசு கொடுக்கின்ற சமயத்தில் அதற்கு ஆகும் தொகையை கழித்து மீதியுள்ள பதிநான்கரை லட்சம் கோடிக்கு மத்திய அரசு விவசாயிகள், தொழிலாளர்கள், கட்டுமான பணிகள் மற்றும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்குவதாக பிரதமர் கூறியுள்ளார்.
மோடி உரையில், எந்தெந்த துறையில் இருந்து அவர்களுக்கு நிதி கிடைக்கும். வெளிமார்க்கெட்டில் எவ்வளவு நிதி பெற இருக்கிறார்கள். எந்தெந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்போகிறார்கள். யார் பலனடைவார்கள் என்ற விவரங்கள் கூறப்படவில்லை.
விவசாய வளர்ச்சிக்காக பெருந்தொகை ஒதுக்கபடுவதாகவும், கட்டுமான பணிகள், சிறு குறு தொழில்களை வளர்க்க நிதி ஆதாரம், பெரிய தொழிற்சாலைகளுக்கு சலுகைகள் வழங்கி உற்பத்தியை பெருக்குவதாகவும், பல நாட்டின் மூலதனம் நம் நாட்டுக்கு வர வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
புதுவையில் மருத்துவர் ஆலோசனையை கேட்காத இளைஞர்.. 100 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவும் அபாயம்
இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் ஒருபுறம் வரவேற்பை கொடுத்தாலும், மற்றொருபுறம் குழப்பத்தை கொடுத்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நிதி பற்றாக்குறை இருந்தாலும் மாநில அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். எனவே கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருபுறம் நோய்த் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். இன்னொரு புறம் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கான திட்டங்களையும் நாங்கள் வகுத்து வருகின்றோம் என நாராயணசாமி தெரிவித்தார்.