புதுச்சேரியில் ரங்கசாமி மட்டும்தான் 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி செய்த ஒரே முதல்வர்!
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை ஒரே ஒரு முதல்வர்- என்.ஆர். ரெங்கசாமி மட்டுமே 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி காலத்தை நிறைவு செய்தவர். தற்போதைய முதல்வர் நாராயணசாமி ஆட்சி காலத்தின் இறுதியில் பெரும்பான்மையை இழந்து ஆட்சியை பறிகொடுத்துவிட்டார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலாவது சட்டசபை 1963-ல் அமைந்தது. அப்போது எட்வர்ட் குபேர் முதல்வராக பதவி வகித்தார். அவர் சுமார் 1 ஆண்டுகாலம்தான் பதவி வகித்தார்.
அவரைத் தொடர்ந்து 1964 முதல் சட்டசபை தேர்தலில் வென்ற காங்கிரஸ் கட்சியின் வெங்கடசுப்பா 2 ஆண்டுகளுக்கு மேல் முதல்வர் நாற்காலியில் இருந்தார். இதன் பின்னர் 1967-ல் பாரூக் மரைக்காயர் ஓராண்டுக்கும் குறைவான நாட்கள் முதல்வராக இருந்தார். மீண்டும் வெங்கடசுப்பா 6 மாதங்கள் முதல்வராக இருந்தார்.
இப்படிதான் புதுச்சேரி முதல்வர் பதவி என்பது தொடக்கம் முதலே சுழல் நாற்காலியாகவே இருந்து வருகிறது. 1968-ம் ஆண்டு 6 மாதங்கள் புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
அதன்பின்னர் 1969 தேர்தலில் திமுகவின் பாரூக் மரைக்காயர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக 1974 வரை முதல்வராக இருந்தார். அவர் ராஜினாமா செய்த நிலையில் 62 நாட்கள் புதுவையில் 2-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த ஜனாதிபதி ஆட்சி கூட 22 நாட்கள்தான் அமலில் இருந்தது.
பின்னர் 1974 தேர்தலுக்குப் பின் அதிமுகவின் சுப்பிரமணியன் ராமசாமி 22 நாட்கள் முதல்வராக இருந்தார். அதன்பின் 3-வது முறையாக புதுவையில் 1974-ம் ஆண்டு முதல் 1977 வரை 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனாதிபதி ஆட்சியே இருந்து வந்தது.
1977 தேர்தலுக்குப் பின் மீண்டும் அதிமுகவின் சுப்பிரமணியன் ராமசாமி முதல்வரானார். ஆனால் ஒரு ஆண்டுகாலத்துக்கும் சற்று கூடுதலாகவே பதவியில் அவர் இருந்தார்.
1978 முதல் 1980-ம் ஆண்டு ஜனவரி வரை வரை ஓராண்டுகாலம் 4-வது முறையாக புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 1980 தேர்தலில் திமுகவின் எம்டிஆர் ராமச்சந்திரன் சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்தார். அவர் ராஜினாமா செய்த நிலையில் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக 5-வது முறையாக ஜனாதிபதி ஆட்சியை எதிர்கொண்டது புதுவை.
1985 தேர்தலில் காங்கிரஸின் பாரூக் மரைக்காயர் மீண்டும் முதல்வரானார். ஏறத்தாழ 5 ஆண்டுகாலத்தை நெருங்கிய காலம் முதல்வராக பாரூக் மரைக்காயர் பதவியில் நீடித்தார்.
1990 தேர்தலில் திமுகவின் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மீண்டும் முதல்வரானாலும் ஓராண்டுதான் அவர் பதவியில் இருந்தார். சுமார் 4 மாதங்கள் புதுவையில் 5-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
1991-ல் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் முதல்வரான வைத்தியலிங்கமும் 5 ஆண்டுகாலத்தை நிறைவு செய்யும் நிலையில்தான் இருந்தார். 1996-ல் திமுகவின் ஜானகிராமன் சுமார் 4 ஆண்டுகாலம் வரை முதல்வராக இருந்தார். அதன்பின்னர் குறுகிய காலம் சண்முகம் முதல்வராக இருந்தார்.
2001 தேர்தலிலும் இதே கூத்துதான் நடந்தது. சண்முகமும் ரங்கசாமியும் முதல்வர் நாற்காலியில் மாறி மாறி அமர்ந்தனர். 2006 தேர்தலிலும் ரங்கசாமியும் வைத்திலிங்கமும் மாறி மாறி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தனர்.
2011-ல் ஆட்சிக்கு வந்த என்.ஆர். ரங்கசாமிதான் 2016 வரை முதல் முறையாக முழுமையாக 5 ஆண்டுகாலம் முதல்வர் பதவியில் நீடித்தவர். 2016-ல் ஆட்சிக்கு வந்த தற்போதைய முதல்வர் நாராயணசாமியும் இன்று சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் ஆட்சியை பறிகொடுத்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.