புதுச்சேரியில் மே 17-க்குப் பின் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கும்: நாராயணசாமி
புதுச்சேரி: நாடு முழுவதும் மே 17 க்குப் பிறகு சில தளர்வுகளுடன் ஊடரங்கு தொடர வாய்ப்புள்ளதாகவும், எனவே மக்கள் அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் 5 வது முறையாக கொரோனா தொற்று தொடர்பாகவும், மே 17 க்குப் பிறகு மாநிலங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் பேசினார். இக்கூட்டத்தில் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்போது நான், பக்கத்து மாநிலமான தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக வேமாக உயர்ந்துகொண்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில வருவாயைப் பெருக்க கடைகள், தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி மாநில வருவாய் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 12 சதவீதம் வருமானம் மட்டுமே கிடைத்துள்ளது. மே மாதத்தில் நிதி பற்றாக்குறை இருக்கிறது. எங்களுடைய இரு மாத வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுசெய்ய வேண்டும். ரிசர்வ் வங்கியில் கடன் வரம்பை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
பொருளாதாரத்தை மேம்படுத்த நிதியாதாரத்தை அளிக்க வேண்டும். புதுச்சேரியை 15 வது நிதிக் கமிஷனில் சேர்க்க வேண்டும். சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டும். பெரிய தொழிற்சாலைகளுக்கு கடனை திருப்பிக் கட்ட காலக்கெடு வழங்க வேண்டும். பொதுமுடக்கத்தை படிப்படியாக தளர்த்த வேண்டும் என தெரிவித்தேன்.
ஆனால் பிரதமர், அவை எதற்கும் பதிலளிக்கவில்லை. பொருளாதார பிரச்னைகள் பற்றி எதையுமே பேசவில்லை. ஆனால், மாநிலங்கள் வரும் 15-ம் தேதிக்கு முன்பு, ஊரடங்கு மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக தகவல் அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளைத் திறக்க வேண்டும். இணையதள மூலம் கல்வியை கற்றுக்கொடுப்பது, சுற்றுலாத்துறை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
பிரதமர் பேசியதிலிருந்து, மே 17 க்குப் பிறகு சில தளர்வுகளுடன் ஊடரங்கு தொடரும் எனத் தெரிகிறது. எனவே, நாம் அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். மாநில அரசானது வருமானத்தைப் பெருக்கவும், மக்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, நாம் ரிசர்வ் வங்கியிலிருந்து கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. தொழில், வியாபார நிறுவனங்களை நடத்துவோர், கடைகள் விற்பனை வரியை செலுத்துவதில்லை. இதற்கு முடிவெடுக்க யோசனை செய்து வருகிறோம். வரும் 15 ஆம் தேதி சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களைப் பொறுத்தவரை, எந்த இடத்தில் பாதிப்பு இருக்கிறதோ அந்தத் தெருவைத் தவிர மற்ற பகுதிகளை பச்சை மண்டலமாக மாற்ற உத்தரவிட்டுள்ளேன்.
மே 17-க்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்வுடன் லாக்டவுன் நீட்டிப்பு- பிரதமர் மோடி சூசகம்
மருத்துவம், கல்வி, சுற்றுலா முடிவுகள் குறித்து கருத்துகளை பதிவு செய்து மத்திய அரசுக்கு அனுப்புவதுடன், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முயற்சித்து வருகிறோம் என நாராயணசாமி தெரிவித்தார்.