சம்பளம் போடக்கூட கைல காசு இல்ல.. மோடிஜி உடனே நிதி கொடுங்க.. நாராயணசாமி வலியுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்பட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கு கூட நிதியில்லை என்றும், மத்திய அரசு உடனடியாக புதுச்சேரி மாநிலத்திற்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி, கரைக்கால், மாகே, ஏனாம் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு கொரோனாவால் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால், வெளியிலிருந்து வருபவர்களுக்குத்தான் அந்த பாதிப்பு உள்ளது. கொரோனா தொற்று நோயானது பரவலாக வரும், அது தணியாது என்று பல கணிப்புகள் வருகின்றன.
அகில இந்திய அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. இறப்பு விகிதம் 3 ஆயிரத்தை கடந்துவிட்டது. மகாராஸ்டிரா, தமிழகம், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் கோரோனா தாக்கம் மிக பெரிய அளவில் உள்ளது. அது இந்தியாவின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கொண்டு இருக்கிறது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளனர். அது மனிதனுக்கு கொடுக்கப்பட்டு வெற்றிகரமாக வந்துள்ளது என கூறுகின்றனர். ஆனால், அந்த மருந்தானது இந்தியாவுக்கு எப்போது வரும், எந்த அளவில் கரோனா தாக்கத்தை தடுத்து நிறுத்தும் என்று நம்மால் கணிக்க முடியவில்லை.
புத்துணர்ச்சி வகுப்பிற்கு பிறகே 10ம் வகுப்பு தேர்வு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் புது வழக்கு!
நிர்மலா சீதாராமன் பேட்டி
இந்தியாவிலும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கின்ற வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், மிக குறுகிய காலத்தில் அதற்கான மருந்தை கண்டுபிடித்தால் அதன் மூலமாக கரோனா நோயை நீக்குவதற்கு வாய்ப்பாக அமையும். மத்திய அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துதரப்பு மக்களுக்கும் ரூ.20 லட்சம் கோடியை தருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமன் தொடர்ந்து 5 நாட்கள் பேட்டி கொடுத்தார். அதில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்னவென்றால், வங்கிகள் மூலமாக தொழிற்சாலைகளுக்கு கடன் கொடுப்பது, ஏற்கனவே வாங்கி கடனுக்கு கட்டுவதற்கு காலக்கெடு கொடுப்பது, சிறு, குறு தொழில்களுக்கு தாராளமாக நிதி கொடுப்பது, விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கொடுப்பது என உத்தரவிட்டுள்ளது.
யார் யாருக்கு பாதிப்பு?
ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுப்பதை தவிர அவர்களது கையில் பணத்தை கொடுப்பதற்கான எந்த உத்தரவும் மத்திய நிதி அமைச்சரகம் போடவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முழுமையான திட்டம் எதுவும் இல்லை. மார்ச் 25 ஆம் தேதி முதல் மூடிய தொழிற்சாலைகள், கடைகள், தொழில் நிறுவனங்களால் அரசுக்கு வருவாய் இல்லை. இப்போது, ஊரடங்கை தளர்த்தி இருந்தாலும் கூட சகஜ வாழ்க்கை திரும்பவில்லை. எனவே, மத்திய அரசானது மாநிலங்களுக்கு தாராளமான நிதி உதவி செய்ய வேண்டும் என பிரதமருடன் காணொலியில் உரையாடும்போது கூறியுள்ளேன்.
ஜிஎஸ்டி இழப்பீடு தேவை
புதுச்சேரிக்கு ஜிஎஸ்டிக்கான இழப்பீட்டை கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நிதி ஆதாரத்துக்கான நிதியை வழங்க வேண்டும் என ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதுவரை அதற்கு பதில் வரவில்லை. மேலும், கொரோனா சம்பந்தமான கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். இடைக்காலமாக ரூ.200 கோடி என மொத்தமாக ரூ.995 கோடி கொடுக்க வேண்டும் எனவும் கடிதம் எழுதி இருந்தேன். அதற்கும் பதில் வரவில்லை. அனைத்து மாநிலங்களும் நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மத்திய அரசானது செவிசாய்க்காமல் இருப்பது வருத்தத்துக்குரியது. உடனடியாக மத்திய அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு உதவி செய்ய வேண்டும். பல மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாமல் இருந்து வருகின்றன. மத்திய அரசின் உதவியின்றி மாநில அரசுகள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.
மேட்டூர் அணை திறப்பு
இப்போது நாம் நாட்டில் உள்ள பத்திரிக்கைகள் எல்லாம் நலிந்துள்ளன. பத்திரிக்கைகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கைகளின் உரிமையாளர்கள் அமைப்பு பிரதமரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். அந்த மனுவை பிரதமர் பரிவோடு கவனித்து பத்திரிக்கை துறைக்கும் மிகப்பெரிய அளவில் உதவி செய்ய வேண்டும். மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த குறுவை சாகுபடிக்கு காரைக்காலுக்கு ஒரு டிஎம்சி தண்ணீரை கொடுக்க வேண்டும். இந்த உத்தரவை தமிழக அரசு மதித்து செயல்பட வேண்டும். இதுசம்பந்தமாக அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அதில், காரைக்காலுக்கு தண்ணீர் வர தமிழக அரசுடன் பேசி ஆயத்த பணிகளை செய்ய வேண்டும். இதற்காக பொதுப்பணித்துறை, விவசாயித்துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா எச்சரிக்கை
பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், கடலூரில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரி மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்துக்கு நிறைய பேருக்கு கொரோனா அறிகுறி வரும் என்று கூறுகின்றனர். எனவே, புதுச்சேரி மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும், தேவையில்லாமல் வெளியே செல்ல கூடாது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென நாராயணசாமி தெரிவித்தார்.