ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.. புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும், மக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி வெங்கட்டா நகர் பகுதியில் உள்ள தமிழ் சங்க வளாகத்தில் புதிதாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலையை தமிழ் சங்க தலைவர் முத்து தலைமையில், முதல்வர் நாராயணசாமி நாராயணசாமி திறந்து வைத்தார்.
சிலை திறப்பு விழாவில் சபாநாயகர் சிவகொழுந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சிலை திறப்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசாக இருந்தாலும், மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும், மாநிலத்தில் ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி இல்லாமல் திட்டத்தை நிறைவேற்ற முடியாது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு புறக்கணித்து, மாநில அரசுகளை உதாசீனம் செய்துள்ளது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஏற்கனவே இந்த திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டம் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன். புதுச்சேரி மாநிலத்தில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றார்.